நாகர்கோவிலில் ரூ.12.82 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம்: கருணாநிதி
நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரூ. 12.82 கோடி செலவில் புற்று நோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
நேற்று நாகர்கோவிலில் திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது முதல்வர் கருணாநிதி பேசியதாவது,
குமரி மாவட்டத்திலேயே போராடியவர்களுக்கு ஏன் பென்ஷன் தரக்கூடாது என்று கேட்டிருக்கிறார்கள். அது பற்றி ஆராய்ந்து உடனே அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு புதிதாக அமைக்க வேண்டும் என்று தினம் தினம் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பவர் அமைச்சர் சுரேஷ் ராஜன். தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி, கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறார்கள். இவர்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான, அறுவை சிகிச்சைக்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்ட போதிலும் ரேடியோ தெரபி தேவைப்படுவோர் உயர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். இதனால் புற்று நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதை ஏற்று நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் ரூ.12.82 கோடி செலவில் புற்றுநோய் உயர் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என நான் உறுதி கூறுகிறேன் என்றார் அவர்.