தூத்துக்குடியில் உப்பு விலை உயர்வு-தொழிலாளர்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி: ஏற்றுமதி அதிகரித்திருப்பதின் எதிரொலியாக தூத்துக்குடியில் உப்பு விலை அதிகரித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது தூத்துக்குடி தான்.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பத்திற்கும் மேற்பட்ட பெரிய அளவிலான உப்பு உற்பத்தி நிறுவனங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர உப்பு உற்பத்தி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
தற்போது ஆண்டொன்றுக்கு சுமார் 15 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு தரத்தில் உற்பத்தியாகும் உப்பானது, உணவு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி உரம், ரசாயன தொழிற்சாலைகள், தோல் பதனிடுதல் என்று பல்வேறு தொழில்களுக்கு பயன்படுகிறது.
உள்நாட்டின் தேவைக்குப் போக இலங்கை, மாலத்தீவு, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மழைக்காலங்களில் நிறுத்தப்படும் உப்பு உற்பத்தி ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை முழு வீச்சில் நடைபெறும்.
இதனால் சில சமயங்களில் உற்பத்தி விலையை விடக் குறைந்த விலைக்கு உப்பு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் தூத்துக்குடி பகுதியில் இந்த சீசனில் உப்பு விலை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் இந்த ஆண்டு வெளிநாடுகளுக்கான உப்பு ஏற்றுமதி அதிகரித்துள்ளது தான்.
மேலும் வேதராண்யம், மரக்காணம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்கு உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவை அதிகரித்துள்ளதால் தூத்துக்குடி பகுதியில் உப்பு விலை அதிகரித்துள்ளது.