ஆஸ்திரேலியாவின் 'ஸ்டிங் ஆபரேஷன்'-ஜெயபால் ரெட்டி கடும் சாடல்
காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழா, நிறைவு விழா, முக்கியப் போட்டிகள் நடைபெறவுள்ள ஜவஹர்லால் நேருவுக்கு தங்களது நிருபர் ஒருவர் வெடிபொருள் அடங்கிய பையுடன் சென்றதாகவும், அவரை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. பையை சோதிக்கவில்லை. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரும் குளறுபடிகள் இருப்பதாக ஆஸ்திரேலியாவின் சேனல் 7 டிவி ஒரு செய்தியை ஒளிபரப்பியது.
இதற்கு ஜெயபால் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு மோசடியான செய்தி, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினர் இல்லாத சமயமாக அந்தப் பகுதி வழியாக ஸ்டேடியத்திற்குள் நுழைந்துள்ளார் அந்த செய்தியாளர். இது விஷமத்தனமான செயலாகும். வேண்டும் என்றே அவப் பெயரை ஏற்படுத்துவதற்காக செய்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் இருந்து, அந்தப் பகுதி வழியாக வெடிபொருளுடன் சென்றிருந்தால், அதை பாதுகாப்பு குளறுபடி என்று கூறலாம். ஆனால்யாருமே இல்லாத இடத்தில் வெடிபொருளுடன் சென்று விட்டு பாதுகாப்பு குளறுபடி என்று சொல்வது கண்டனத்துக்குரியது.
போட்டிக்கான அனைத்து 17 இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். கோட்டை போல அனைத்து இடங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றார்.
டெல்லி காவல்துறையும் ஆஸ்திரேலிய டிவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் கூறுகையில், இது போலியான ஸ்டிங் ஆபரேஷன். உள்நோக்கத்துடன் கூடியது. வேண்டும் என்றே அவப் பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செய்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஓட்டை இருப்பது போல காட்டுவதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட செய்தியாளர் சென்ற பாதை, ஸ்டேடியத்திற்கு வெகு தொலைவில் உள்ளதாகும். மேலும் அந்த செய்தியாளர் போலீஸார் சோதனையிடும் பகுதிக்கு வரவே இல்லை. வந்திருந்தால் நிச்சயம் பிடிபட்டிருப்பார் என்றார்.