திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்: குலாம் நபி ஆசாத் திட்டவட்டம்
சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணி மிக உறுதியாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும். இந்தக் கூட்டணி முன்பை விட அதிக இடங்களில் வெல்லும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் கூறினார்.
இதன்மூலம் காங்கிரஸ்-அதிமுக, காங்கிரஸ்-தேமுதிக கூட்டணி அமையப் போவதாக (முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனின் பேச்சை அடிப்படையாக வைத்து) சில பத்திரிக்கைகள் பரப்பி வரும் செய்திகளுக்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
திருச்சியில் சோனியா காந்தி பங்கேற்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டம் தொடர்பாக ஆசாத் தலைமையில் சென்னையில் தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தது.
அதில் திமுக கூட்டணி தொடரும் என குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாகத் தெரிவித்ததோடு, கூட்டணியை விமர்சிப்போர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தார்.
இந்தக் கூட்டத்தில் இருந்து இளங்கோவன் பாதியிலேயே வெளியேறினார்.
இக் கூட்டத்திற்குப் பின்னர் ஆசாத் அளி்த்த பேட்டி:
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தமிழ்நாட்டில் திமுக அரசும் பல்வேறு நலத் திட்டங்களை இதுவரை இல்லாத வகையில் நிறைவேற்றியுள்ளன. இதை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு அனைவரும் இணைந்து இந்த பணியில் ஈடுபட வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வருவதற்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலை விட வரும் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறும் வகையில் போட்டியிடுவோம்.
வரும் சட்டசபை தேர்தலுக்கு தங்களை காங்கிரஸ் கட்சியினர் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
கூட்டணி தர்மத்தை மதித்து பேச வேண்டும்:
கேள்வி: திமுக- காங்கிரஸ் கூட்டணி பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை கூறிவருகிறார்களே?
ஆசாத்: காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி. ஒவ்வொருவருக்கும் கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு. அதே நேரத்தில் பொதுமக்களிடம் பேசும்போது நமது கட்சியின் கோட்பாடு, கூட்டணி தர்மத்தை மதித்து பேசவேண்டும். கூட்டணி சம்பந்தமாக 'லட்சுமன் கோட்டை' தாண்டிப் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி மிக உறுதியாக உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும். எங்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும்.
கேள்வி: திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்படி இருக்கும்?
ஆசாத்: இது உள்கட்சி சம்பந்தப்பட்டது. இது பற்றி உங்களிடம் கூற முடியாது.
கேள்வி: காஷ்மீரில் இப்போது நிலைமை எப்படி உள்ளது?
ஆசாத்: இப்போது உள்ள நிலைமையை விட மோசமான நிலைமை கடந்த காலங்களில் அங்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 62 ஆண்டுகால அனுபவத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மதிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கேள்வி: பன்றி காய்ச்சலை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
ஆசாத்: பன்றி காய்ச்சல் ஒரு சர்வதேச பிரச்சனை. 203 நாடுகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டும் இந்த நோயின் காரணமாக 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளோடு ஒப்பிடும்போது நம்நாட்டில் பாதிப்பு குறைவுதான். பன்றி காய்ச்சல் நோய் ஏற்படுவதை தடுக்கவும், இந்த நோயால் ஏற்படும் பாதிப்பை அகற்றவும் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழக அரசுக்கும் 10 லட்சம் மாத்திரைகளை வழங்கிருக்கிறோம். நோயை தடுப்பதற்காக 80,000 தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு மேலும் 30,000 தடுப்பூசிகளை வழங்க நேற்றுதான் அனுமதி வழங்கினேன் என்றார்.