காமன்வெல்த் குழப்பம்-ஜெயபால் ரெட்டி, எம்.எஸ்.கில்லுடன் பிரதமர் அவசர ஆலோசனை
டெல்லி காமன்வெல்த் போட்டியைப் பார்த்த உலக நாடுகள் சிரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஒரு பக்கம் இன்னும் கட்டுமானப் பணிகளை முடிக்காமல் உட்கார்ந்திருக்கின்றனர். மறுபக்கம் கட்டிய பாலம் இடிந்து விழுகிறது. இது போதாதென்று ஃபால் சீலிங் பெயர்ந்து விழுந்து பல்லைக் காட்டியுள்ளது.
வீரர்கள், வீராங்கனைகள்,அதிகாரிகள் தங்கும் கேம்ஸ் வில்லேஜில் சாக்கடையும், மலமும் தேங்கிக் கிடப்பதாக வெளிநாட்டு அணிகள் முகம் சுளித்து கூறியுள்ளன. வீரர், வீராங்கனைகளுக்கான அறைகளுக்குள் சொறி நாய்கள் படு சுதந்திரமாக சுற்றித் திரிவிதாக காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பென்னல் குற்றம் சாட்டியுள்ளார்.
இப்படி பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைக் காரணம் காட்டி பல நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து போட்டியிலிருந்து விலகி வருகின்றனர். இதனால் இந்தியாவின் பெயர் படு வேகமாக டேமேஜாகி வருகிறது.
இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக களத்தில் குதித்துள்ளார். ஜெயபால் ரெட்டியையும், கில்லையும் அவசர ஆலோசனைக்காக அவர் அழைத்துள்ளார்.
பாதுகாப்பு குறித்து ப.சிதம்பரம் ஆலோசனை:
இந்த நிலையில் இன்று காலை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 20 பாதுகாப்பு அமைப்புகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
ஐபி, ரா ஆகிய உளவு அமைப்புகள், ராணுவம், விமானப்படை, சிபிஐ, என்ஐஏ, டெல்லி, ஹரியானா காவல்துறை தலைவர்கள், டெல்லி போலீஸ் கமிஷனர் உள்பட 20 பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார் ப.சிதம்பரம். இந்த ஆலோசனையின்போது உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
காமன்வெல்த் போட்டியின்போது லஷ்கர் இ தொய்பா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரித்திருப்பதன் பின்னணியில் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கேம்ஸ் வில்லேஜை சுற்றிப் பார்த்த ஷீலா:
இந்த நிலையில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், காமன்வெல்த் போட்டி வில்லேஜை சுற்றிப் பார்த்தார். அங்குள்ள சுகாதாரக் குறைவு உள்ளிட்டவற்றையும் அவர் ஆய்வு செய்தார். கேம்ஸ் வில்லேஜை இன்று முதல் டெல்லி அரசு தனது பொறுப்பில் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.