காமன்வெல்த் விளையாட்டை நடத்த அனுமதி வாங்க 72 நாட்களுக்கு லஞ்சம் கொடுத்த இந்தியா
டெல்லி: காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு ஒப்புதல் பெறுவற்காக 72 நாடுகளுக்கு இந்தியா லஞ்சம் கொடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 1 லட்சம் டாலர் லஞ்சம் தரப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. மொத்தமாக ரூ. 35 கோடி வரை லஞ்சம் போயுள்ளதாம். இதன் மூலம் 19வது காமன்வெல்த் போட்டியை டெல்லியில் நடத்த ஆதரவு திரட்டப்பட்டுள்ளதாக அது கூறுகிறது.
இந்த செய்தியை டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ளது. அதில், ஜமைக்காவில் நடந்த அடுத்த காமன்வெல்த் போட்டியை நடத்தும் நகரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் ஹாமில்டன் நகருக்குக் கிடைக்கவிருந்த வாய்ப்பை டெல்லி தட்டிப் பறித்தது. ஆனால் இதற்காக 72 நாடுகளுக்கு இந்தியா சார்பில் லஞ்சம் கை மாறியுள்ளது.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் 1.25 லட்சம் டாலர் கைமாறியுள்ளது. இந்தப் பணத்தை வீரர்களுக்கான பயிற்சிக்கு என்று கூறி கொடுத்துள்ளது இந்தியா.
காமன்வெல்த் அமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து நாடுகளுக்கும் லஞ்சம் அளித்துள்ளது இந்தியா. இதில் ஆஸ்திரேலியாதான் முதல் நபராக இந்தியாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. எனவேதான் ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் கூடுதல் லஞ்சம் தரப்பட்டுள்ளது.
அதேசமயம் ஹாமில்டன் நகரும் கூட லஞ்சம் கொடுத்தது. ஆனால் அது ஒரு நாட்டுக்கு 70 ஆயிரம் டாலர் மட்டுமே கொடுத்தது. அதை விட கூடுதலாக டெல்லி கொடுத்ததால், அதற்கு வாய்ப்பு போய் விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமைக்காவில் நடந்த வாக்கெடுப்பில் 46-22 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று போட்டியை கைப்பற்றியது நினைவிருக்கலாம்.