2 ஜி முறைகேடுகள் குறித்து பாராபட்சமற்ற விசாரணை: சிபிஐ உறுதி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையை நியாயமாகவும், பாரபட்சமற்ற முறையிலும் நடத்துவோம் என்று மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2008-ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமம் ஒதுக்கீடில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ 70 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இதில் தொலைத்தொடர்பு துறைக்கு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஆ.ராசாவுக்கு முக்கியப் பங்குள்ளதாக புகார் கூறப்பட்டது. ஆனாலும் சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் அவருடைய பெயர் சேர்க்கப்படவில்லை.
இதுதொடர்பாக விசாரணை நடத்த தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் தனியார் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆ.ராசாவுக்கும், சிபிஐ, தொலைத்தொடர்பு துறை ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சிபிஐ இந்த வழக்கை விசாரணை செய்து தற்போதைய வழக்கு நிலை குறித்த பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தது.
அதில், "இந்த வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறது. விசாரணையில் எந்த பாரபட்சமும் யாருக்கும் காட்டப்பட மாட்டாது. யாருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ விசாரணை இருக்காது. விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்," என்று சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் ராசாவோ, அவரது அமைச்சகமோ அல்லது வழக்கில் தொடர்புடையவர்களோ உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தங்கள் சார்பில் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சுப்பிரமணிய சாமி...
இதற்கிடையே அமைச்சர் ஆ.ராசாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பிரதமர் அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.