பத்ரிநாத்தில் சிக்கித் தவித்த 18 தமிழர்களை மீட்ட மு.க.அழகிரி
மதுரை: தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் வடமாநிலங்களுக்குச் சுற்றூலா சென்றனர். சென்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஊர் திரும்ப முடியாமல் பத்ரிநாத்தில் சிக்கித் தவித்தனர். மத்திய அமைச்சர் மு. க. அழகிரியின் முயற்சியால் அவர்கள் சென்னை திரும்புகின்றனர்.
சென்னை வேளச்சேரி விஜய நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால் (71). மின்வாரியத்தில் துணை நிதிக்கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் மற்றும் அவர்கள் நண்பர்கள் குடும்பத்துடன் புனித ஸ்தலமான பத்ரிநாத்திற்குச் செல்ல விரும்பினார்.
இதையடுத்து கடந்த 10-ம் தேதி 18 பேர் ஒரு டிராவல்ஸ் மூலமாக டெல்லிக்குப் புறப்பட்டனர். அங்கு இவர்களுடன் மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மேலும் 70 தமிழர்களும் சேர்ந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கடந்த 12-ம் தேதி 4 மினி பஸ்களில் ரிஷிகேஷ் சென்றடைந்தனர். கடந்த 15-ம் தேதி பத்ரிநாத் சென்றார்கள்.
வழிபாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து 18-ம் தேதி அவரவர் ஊருக்குப் புறப்பட்டனர். அப்போது அந்தப் பகுதிகளில் பெய்த கனத்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்திய இராணுவத்தின் கீழ் இருக்கும் இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்கள் மீண்டும் பத்ரிநாத்திற்கே திரும்பினர். 5 நாட்களாக அங்கேயே சரியான உணவின்றித் தவித்தனர்.
இதையடுத்து நரசிம்மன் சென்னையில் உள்ள அவரது மகன் விஜயகுமாரை தொடர்பு கொண்டு அவர்கள் நிலைமையைப் பற்றித் தெரிவித்தார். உடனே விஜயகுமார் டெல்லியில் இருக்கும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த அழகிரி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இராணுவத்தினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு பத்ரிநாத்தில் இருந்து டெல்லி செல்லும் சாலையை சீரமைத்தனர். பின்னர் பத்ரிநாத்தில் சிக்கிக் கொண்ட ராஜகோபால், நரசிம்மன் உள்ளிட்ட 18 பேரும், ஆங்காங்கே வாகனங்களில் தவித்தவர்களும் டெல்லி சென்றனர்.
டெல்லியில் இருந்து தமிழர்கள் 18 பேரும் நேற்று இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டனர். பத்ரிநாத்தில் செய்வதறியாது தவித்தவர்களுக்கு உதவிய மு.க.அழகிரிக்கு அவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.