பல்லைக் காட்டும் கேம்ஸ் வில்லேஜ்-குத்துச்சண்டை வீரர் அகில் உட்கார்ந்தவுடன் உடைந்தது கட்டில்!
இந்திய அணியினர் கேம்ஸ் வில்லேஜை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர். குத்துச் சண்டை வீரர் அகில் குமார், தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றுள்ளார். அங்கு போய் சற்று நேரம் உட்காருவோமே என்று நினைத்து கட்டிலில் உட்கார்ந்தார். அவ்வுளவுதான், அடுத்த விநாடியே கட்டில் மேல் பகுதி புட்டுக் கொண்டு விட்டதாம்.
அதிர்ஷ்டவசமாக அகிலுக்கு காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ஒலிம்பிக் பவனுக்கு நாங்கள் போய் அக்ரடிடிஷன் கார்டுகளைப் பெற்றுக் கொண்டு கேம்ஸ் வில்லேஜ் திரும்பினோம். அங்கு எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குப் போய் சற்று இளைப்பாறலாமே என்று நினைத்து கட்டிலில் உட்கார்ந்தேன். அடுத்த விநாடியே அது உடைந்து விட்டது.
இதையடுத்து படுக்கையை நான் சோதித்தேன். அப்போதுதான் கட்டிலில் போடப்பட்டிருந்த பிளைவுட் சில பகுதிகளில் போடப்படவே இல்லை என்று தெரிந்தது. இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு ஓய்வெடுக்க நினைத்தபோது இப்படியாகி விட்டதே என்று வேதனைப்பட்டேன்.
போட்டிகளில் பங்கேற்கும் டென்ஷனில் உள்ள வீரர், வீராங்கனைளுக்கு நல்ல ஓய்வும், வசதிகளும் தேவைப்படும் நிலையில் இப்படிப்பட்ட வசதி வருத்தம் தருகிறது. டாய்லெட்களும் கூட சுத்தமாகவே இல்லை என்றார் வேதனையுடன்.
முன்னதாக பத்து பேர் கொண்ட இந்திய குத்துச் சண்டை அணியினரை கேம்ஸ் வில்லேஜுக்குக் கூட்டிச் செல்ல உரிய பஸ் வராததால் அவர்கள் ஒலிம்பிக் பவனிலேயே கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்துக் கிடந்த அவலமும் இன்று நடந்தேறியது.
இன்னும் என்னென்ன அக்கப்போரெல்லாம் நடக்கப் போகிறதோ...!