காஷ்மீரில் மனித நேயம்-பண்டிட்டின் உடலை தகனம் செய்த முஸ்லீம் குடும்பம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் உடல் நலக்குறைவால் மரணமடைந்த 55 வயது கிருஷன் சந்த் பூர்பி என்ற பண்டிட்டின் உடலை,முஸ்லீம் குடும்பத்தினர் தகனம் செய்து இறுதிச் சடங்குகளை நடத்தியுள்ளனர்.
பூர்பி நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றியிருந்தார். அவர் மரணமடைந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ள முஸ்லீ்ம்கள் இணைந்து விறகுகளை சேகரித்து உடல் தகனத்தை மேற்கொண்டனர். மேலும் காஷ்மீருக்கு வெளியே வசித்து வரும் பூர்பியின் மகள் உறவினர்கள் உள்ளிட்டோரையும் பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடு செய்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தனர்.
ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாமல் இந்த தகன நிகழ்ச்சி நடந்தது நல்லிணக்கம் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபிப்பதாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் ஊரடங்கு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் இருந்ததால் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது.
காஷ்மீரில் கடந்த 90களில் வெடித்த பெரும் கலவரத்தைத் தொடர்ந்து அங்கிருந்து பண்டிட் சமுதாயத்தினர் இடம் பெயர்ந்து சென்றனர். கிட்டத்தட்ட 3 லட்சம் பண்டிட்டுகள் இடம் பெயர்ந்தனர். இருப்பினும் 4000 பண்டிட்டுகள் மட்டும் உயிரையும் பொருட்படுத்தாமல் காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே வசிக்க முடிவு செய்தனர். அவர்களில் பூர்பியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.