இந்தியாவில் முதன்முதலாக பாபநாசம் காணி சமூக மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு
வி.கே.புரம்: இந்தியாவிலேயே முதன் முதலாக பாபநாசம் மலையில் உள்ள காணி இன மக்களுக்கு இந்தியன் ஓவர்சிஸ் வங்கி ஸ்மார்ட் கார்டுகளை வழங்கியது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காணி குடியிருப்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த காணி இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு நெல்லை மண்டல இந்தியன் ஓவர்சிஸ் வங்கி சார்பில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்கு நெல்லை மண்டல முதுநிலை மேலாளர் ரசீத் கான் தலைமை வகித்தார்.
முதுநிலை மேலாளர் ராஜூ, சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.கே.புரம் கிளை மேலாளர் பெரியநாயகம் வரவேற்றார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குனர் நூபுர்மித்ரா காணி இன மக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,
இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி மக்களைத் தேடி சேவை செய்கிறது. இதில் ஒன்றாக இந்தியாவிலேயே முதன்முதலாக இப்பகுதியைச் சேர்ந்த காணி மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் எந்த நேரத்தில் பணம் எடுக்கவோ, செலுத்தவோ வங்கிக்குச் செல்ல வேண்டாம். தொலைபேசியில் அழைத்தாலே போதும் வங்கி ஊழியரே வந்து பணத்தைக் கொடுப்பார். இதன் மூலம் நேரம் மிச்சமாகும் என்றார்.