சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி - பாஜக
நாகர்கோவில்: வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக தயார் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
"இந்து மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று பாஜக நடத்தி வருகின்ற போராட்டத்தின் அடுத்த பகுதியாக வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி சென்னை திருவெற்றியூரில் இருந்து மிகப்பெரிய பாதயாத்திரை தமிழகம் முழுவதும் செல்ல உள்ளது.
ஜனவரி 29-ம் தேதி மீண்டும் சென்னை சென்றடைந்து அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். இதே கோரிக்கைக்காக வரும் நவம்பர் மாதம் 27-ம் தேதி குமரி மாவட்டத்தில் 200 இடங்களில் சத்யாகிரகப் போராட்டம் நடத்தப்படும்.
பாஜக தனித்து போட்டியிட தயாராக உள்ளது. இந்த முறை தமிழக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களை அனுப்பியே தீருவோம் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் அவர்களது சாயம் வெளுத்து விடும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தான் அக்கட்சியின் நிலைமை", என்றார் ராதாகிருஷ்ணன்.