கேம்ஸ் வில்லேஜ் அறையில் பாம்பு ஊடுறுவியதாக தென் ஆப்பிரிக்கா புகார்
காமன்வெல்த் போட்டிக்கு நேரம் சுத்தமாக சரியில்லை. அடுத்தடுத்து ஏதாவது ஒரு சர்ச்சை கச்சைக் கட்டிக் கொண்டு கிளம்புகிறது. நேற்று தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவரின் அறையில் பாம்பு ஊடுறுவியதாக பரபரப்பு ஏற்பட்டது.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் இன்னும் வரவில்லை. ஆனால் வீரர்கள் தங்கும் அறையைப் பரிசோதிப்பதற்காக துணைத் தூதர் ஹாரிஸ் நேற்று அறைகளை சுற்றிப் பார்த்தார். அப்போது ஒரு அறையில் பாம்பு இருந்ததைப் பார்த்தாராம் ஹாரிஸ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இன்னும் நாங்கள் அறைகளுக்குப் போகாத நிலையில் அதன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தங்க முடியாத அளவுக்கு அவை உள்ளன.
நேற்று ஒரு அறையில் பாம்பைப் பார்த்தேன். அது இந்திய பாம்பா என்பது சரியாகத் தெரியவில்லை. இப்படி பாம்புகள் வந்து போனால் நாங்கள் எப்படி தங்க முடியும். இப்படிப்பட்ட அறைகளில் தங்க வேண்டாம் என்றுதான் எங்களது வீரர்களை நாங்கள் அறிவுறுத்த முடியும்.
எங்களது வீரர்களின் உயிருக்கு இது பேராபத்தாக முடியும். இது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இதுகுறித்து எங்களுடன் வந்த அதிகாரியிடம் கூறினேன். அனைத்தும் சரி செய்யப்பட்டுவிடும் என்று அவர் உறுதியளித்தார்.
நாங்கள் போட்டியில் பங்கேற்கிறோம். அதேசமயம், அனைத்துப் பிரச்சினைகளும் சரியானால்தான் எங்களது அணிகளை நாங்கள் இந்தியாவுக்குக் கிளம்பி வரச் சொல்வோம் என்றார் ஹாரிஸ்.