ஜார்க்கண்ட்டில் 10 மாவோயிஸ்ட் நக்சலைட்கள் சுட்டுக் கொலை
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 10 மாவோயிஸ்ட் நக்சலைட்கள் உயிரிழந்தனர்.
இந்த அதிரடி நடவடிக்கையின்போது மாவோயிஸ்டுகளின் பல முகாம்களும் பூண்டோடு அழிக்கப்பட்டன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நேற்று தொடங்கி நடந்த நடவடிக்கையில் இந்த இழப்பை நக்சலைட்கள் சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் டிஜிபி நியாஸ் அகமது கூறுகையில், குறைந்தது 10 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். சிலரது உடல்களை நாங்கள் மீட்டுள்ளோம். பல முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளன.
மாநில போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட 2000 பேர் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். சரந்தா காட்டுப் பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நக்சலைட்களைக் கண்காணிப்பதற்கும், காயமடைந்த எங்களது வீரர்களை மீட்கவும் மூன்று ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றார் அவர்.