மதுரையிலி்ருந்து டெல்லி, மும்பைக்கு விமானம்-ஸ்பைஸ்ஜெட் இயக்குகிறது
இன்று முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரையிலிருந்து சென்னை வழியாக தினசரி டெல்லி, மும்பைக்கு விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தென் தமிழகத்தின் நுழைவாயிலாக திகழ்கிறது மதுரை. மேலும், தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகராகவும் பெருமிதப் பின்னணியைக் கொண்டது மதுரை. எனவே மீனாட்சி அம்மன் அரசாளும் மதுரையிலிருந்து டெல்லிக்கும், மும்பைக்கும் விமானம் இயக்கும் நற்செய்தியை அறிவிக்கிறோம் என்றனர்.
இன்று காலை 9.45 மணிக்கு சென்னையிலிருந்து கார்டமம் என்ற பெயரிடப்பட்ட போயிங் 737-8 விமானம் வந்து இறங்கியது. அதற்கு பாரம்பரிய வரவேற்பு அளித்து கெளரவித்தனர்.
கடந்த ஆண்டுதான் இந்த விமான நிறுவனத்தை சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் ரூ. 750 கோடிக்கு வாங்கினார். அதன் பிறகு இந்த நிறுவனம் தனது சேவையை தொடங்கும் முதல் நகரம் மதுரை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சர்வதேச நிறுவனமாகிறது. அக்டோபர் 7ம் தேதி காத்மாண்டுக்கும், அக்டோபர் 9ம் தேதி கொழும்புக்கும் தனது சேவையை ஸ்பைஸ்ஜெட் தொடங்குகிறது.