காமன்வெல்த் போட்டியை பிரதீபா பாட்டீல், சார்லஸ் இணைந்து தொடங்கி வைப்பார்கள்
இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளின் கூட்டமைப்புதான் இந்த காமன்வெல்த். இவர்கள் எல்லாம் ஒன்று கூடி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் போட்டிதான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி. ஒவவொரு முறை போட்டி தொடங்கும்போதும் அதை இங்கிலாந்து ராணியார்தான் தொடங்கி வைப்பார். அதாவது அடிமைத்தனத்திலிருந்து மீண்டாலும் அந்த அடிமைப் பாரம்பரியத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர் காமன்வெல்த் அமைப்பினர்.
காமன்வெல்த் போட்டிக்கான பேட்டன் ஓட்டத்தையும் இங்கிலாந்து அரசியார்தான் தொடங்கி வைப்பார்.
இந்த முறை டெல்லி காமன்வெல்த் போட்டியையும் ராணி எலிசபெத் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ரொம்ப பிசியாக இருக்கிறாராம். இதனால் டெல்லிக்கு வர மாட்டாராம். இதனால் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலே இந்த முறை போட்டியைத் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காலம் காலமாக இருந்து வரும் பாரம்பரியத்தை (அதாவது போட்டியைத் தொடங்கி வைப்பது) இழக்க விரும்பாத இங்கிலாந்து ராஜகுடும்பம், தற்போது இளவசர் சார்லஸை அனுப்பி வைத்து போட்டியைத் தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து காமன்வெல்த் அமைப்பிடம் தெரிவித்து விட்டதாம் ராஜ குடும்பம். அதுவும் இதை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் போட்டியைத் தொடங்கி வைக்க மாட்டார், சார்லஸ்தான் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
காமன்வெல்த் அமைப்பு மற்றும் இங்கிலாந்து அரசின் இந்த செயல், இந்தியாவில் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்தியாவை அவமதித்து விட்டார் ராணி எலிசபெத். இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இது அவமானம் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்தள்ளன.
இதையடுத்து இந்தப் பிரச்சினையை சமாளிக்க புதிய திட்டத்தை காமன்வெல்த் அறிவித்துள்ளது. அதன்படி பிரதீபா பாட்டீலும், சார்லஸும் இணைந்து போட்டியைத் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டியை தொடங்கி வைப்பதாக சார்லஸ் அறிவிப்பாராம். போட்டிகள் தொடங்குவதாக பிரதீபா பாட்டீல் கூறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.