காங். தலைமையில் ஆட்சி அமைக்க விரும்புகிறோம்-தங்கபாலு
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 9ம் தேதி திருச்சி வருகை தர உள்ளார். இதையொட்டி தமிழகம் முழுவதும் தங்கபாலு காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறார்.
நாகர்கோவிலில் உள்ள பெருமாள் மண்டபத்தில் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கபாலு பேசுகையில்,
காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்தக் கூட்டணி 10 இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள், கூட்டணி பற்றி இப்போது எதுவும் நாம் சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் அது தொடர்பாக சோனியா காந்தி தான் இதை முடிவு செய்வார்.
ஏற்கனவே, கூட்டணி குறித்து சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத் தெளிவுபடுத்திவிட்டார். மத்தியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சி தொடர்கிறது.
தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க விரும்புகிறோம். அதற்கான சூழல், நேரம், காலம் ஆகியவற்றை காங்கிரஸ் தலைமை தீர்மானிக்கும் என்றார்.