பொன்சேகாவை விடுவிக்கக் கோரி மகள்கள் போராட்டம்!
கொழும்பு: இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் தந்தை பொன்சேகாவை விடுவிக்கக் கோரி அவரது மகள்கள் இத்தாலியில் போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த கடைசி போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது. போர் முடிந்த பிறகு அதிபர் ராஜபக்சேவுக்கும், ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பிறகு அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிட்டு பொன்சேகா தோல்வி அடைந்தார். அதன்தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான சதி, கொலை முயற்சி உள்பட பல குற்றங்கள் அடிப்படையில் பொன்சேகா அவருடைய ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பொன்சேகாவை குற்றவாளி என்று இலங்கை ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி இத்தாலியில் போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்துக்கு பொன்சேகாவின் மகள்களான அப்சரா மற்றம் அபர்ணா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுரகுமார திசாநாயக்க. அர்ஜுன ரணத்துங்க, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்தன, அக்கிலவிராஜ் காரியவம்சம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும். இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.