டெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் அமைப்பின் (ஐபிஎல்) இயக்குனர் குழுவில் இருந்து சுனில் கவாஸ்கர் நீக்கப்பட்டுள்ளார்.இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் 81வது ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இதில் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக என்.சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு இவர் பதவியேற்றுக்கொள்வார்.2006ம் ஆண்டு கிரிக்கெட் வாரியத்திலிருந்து நீக்கப்பட்ட அதன் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் நீக்கமும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் பிசிசிஐக்குத் திரும்புகிறார்.மேலும் ஐபிஎல் நிர்வாகக் குழுவை மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசி்க்கப்பட்டது. அதன்படி கவாஸகர் நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரவி சாஸ்திரி, மன்சூர் அலிகான் பட்டோடி ஆகியோர் தொடர்ந்து பதவியில் நீடிக்க அனுமதி்க்கப்பட்டுள்ளது.தற்போது ஐபிஎல் துணைத் தலைவராக இருக்கும் நிரஞ்சன் ஷா, கிரிக்கெட் வாரியத்தின் மேற்கு மண்டல துணைத் தலைவராக இருக்கும் சிரயூ அமீனுக்குப் பதிலாக அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.சிரயூ அமீன் தற்போது ஐபிஎல் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஐ.பி.எல். நிர்வாக குழுவில் புதிதாக அனுராக் தாகூர், ரன்ஜீப் பிஸ்வால் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இது தவிர ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொச்சி அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்த அணிகளின் உரிமையாளர்கள் விவரம் மற்றும் அதன் நிதி ஆதாரங்கள் குறித்து அந்த நோட்டீசில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.மேலும் நிதி மோசடி புகாரில் சிக்கி பதவியிழந்த ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்குப் பதிலாக கிரிக்கெட் வாரியத்தின் மத்திய மண்டலத் தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட்டார்.