அயோத்தி தீர்ப்பு: சந்நியாசிகள் எடுக்கும் முடிவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும்-இல.கணேசன்
நிருபர்களிடம் பேசிய அவர், அயோத்தி வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பை இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் இருந்தது. பாபரின் இந்திய படையெடுப்பு காலத்தில் அந்த கோவில் இடித்து தள்ளப்பட்டு மசூதி வடிவிலான வெற்றிச் சின்னம் கட்டப்பட்டது. அது வெற்றி சின்னமே தவிர முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியாக இருந்ததில்லை.
பின்னர் இந்தக் கோவிலை மீட்க நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் 4 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்த நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இப்போது வருகிறது.
இதை முன்னிட்டு அரசு பதற்றமான இடங்கள் என்று கண்டறியப்பட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல கர்நாடக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதே போல தமிழக அரசும் பள்ளிகளுக்கு பிற்பகலிலாவது விடுமுறை வழங்க வேண்டும்.
தீர்ப்பு எதுவாக இருந்தாலும், வன்முறையில் இறங்கித்தான் தீர்வு காணவேண்டும் என்பது தேசத்திற்கு ஏதுவான செயல் அல்ல. தீர்ப்பின் முடிவு குறித்து சந்நியாசிகள், சாதுக்கள் எடுக்கும் முடிவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்றார்.
கேள்வி: தீர்ப்பு எப்படி இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறியுள்ளனவே?
பதில்: அமைதியாக இருந்தால் மகிழ்ச்சி தான். இந்தத் தீர்ப்பை யாரும் மத ரீதியாக பார்க்க வேண்டாம். ஒரு இந்தியனாகவே இந்தத் தீர்ப்பை பார்க்க வேண்டும்.
கேள்வி: இந்த தீர்ப்பு எப்படி இருக்கும்?
பதில்: தீர்ப்பு பாஜகவுக்கு உந்து சக்தியாக இருக்கும் என்றார்.