காமன்வெல்த் போட்டிகளில் பெரும் ஊழல்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடந்துள்ள பெரும் முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் தொடங்கவுள்ள இந்தப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளிலும் முறைகேடுகளும், ஊழல்களும் நடந்துள்ளன. பணிகள் தரமாக நடக்கவில்லை. போட்டி தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலான பணிகள் பூர்த்தியடையவும் இல்லை.
இந் நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இந்தப் போட்டிகளுக்காக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஜந்தர் மந்தர் பகுதியில் 100 மீட்டருக்கும் மேல் உயரமான கட்டிடம் கட்டப்படுவதை எதிர்த்தும் மத்திய அரசின் தொல்லியல் துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
நீதிபதி சிங்வி மற்றும் நீதிபதி கங்கூலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தொல்லியல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஜந்தர் மந்தர் பகுதியில் விதிமுறைகளை மீறி உயரமான கட்டிடம் கட்ட டெல்லி மாநில அரசு அனுமதி அளித்தது செல்லாது. அதற்கு தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்றார்.
இதையடுத்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ரூ.70,000 கோடி செலவில் நடத்தப்படுகின்றன. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்று உள்ளதாக தெரிய வருகிறது. பணிகள் முழுமையாக நடைபெறாமலேயே பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்ட பாலம் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது வேதனை அளிக்கிறது.
டெல்லி அரசும் பல விதிமுறைகளை மீறியுள்ளது. தொல்லியல்துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இப்படி பலவீனமான கட்டிடம் கட்ட டெல்லி அரசு அனுமதி கொடுத்தது ஏன்?.
இதுபோன்ற நிகழ்வுகளைக் கண்டு, நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்றனர். இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
டிரைவரை தடுத்து நிறுத்தியதால் நடந்து சென்ற ப.சி:
இதற்கிடையே போட்டி அரங்கம் ஒன்றை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சென்றார். அவருக்கும், காருக்கும் உள்ளே செல்வதற்கான அனுமதி அடையாள அட்டைகள் இருந்தன.
ஆனால், அவருடைய பாதுகாப்பு அதிகாரி மற்றும் கார் டிரைவருக்கு அனுமதி அட்டை இல்லை. இதனால், நுழைவாயிலில் இருந்த டெல்லி போலீசார், சிதம்பரத்தின் தெரிவித்துவிட்டு இருவரையும் தடுத்து நிறுத்தினர்.
விதிகளுக்கு மதிப்பளித்த சிதம்பரம், அந்த இடத்திலேயே காரை விட்டு இறங்கி, பாதுகாப்பு அதிகாரியையும் டிரைவரையும் அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு, அரை கி.மீ. தூரம் நடந்து சென்று விளையாட்டு அரங்கை அடைந்தார்.