இந்தியன் வங்கியின் 21 கிளைகள், 31 ஏடிஎம்கள்: துவக்கி வைத்தார் கருணாநிதி!
சென்னை: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்தியன் வங்கியின் 21 புதிய கிளைகள், 31 ஏ.டி.எம். மையங்களை முதல்வர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கிளைகள் மற்றும் மையங்களை அவர் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு, தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் புதிதாகச் செயல்பட உள்ள இந்தியன் வங்கியின் 21 கிளைகளையும், 31 ஏ.டி.எம். மையங்களையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைத்தார். இதில், தமிழகத்தில் மட்டும் 5 கிளைகளும், 21 ஏ.டி.எம். மையங்களும் தொடங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், "நாடு முழுமையிலும் செயல்படும் இந்தியன் வங்கியின் 52 புதிய கிளைகள் மற்றும் ஏடிஎம்களைத் தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியன் வங்கி, தமிழகத்தில் ஒரு முன்னணி வங்கியாகச் செயல்பட்டு வருகிறது. முன்னுரிமைத் துறைகளுக்கு மட்டும் அல்லாமல் மாநிலத்திலுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு இந்த வங்கி பெரிதும் உதவி வருகிறது. தமிழகத்தில் மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு வரும் இந்த வங்கியின் தலைவர், அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன்" என்றார்.
இந்தியன் வங்கி, 2 வெளிநாட்டுக் கிளைகள் உள்பட 1796 கிளைகளையும், 1062 ஏ.டி.எம். மையங்களையும் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 768 கிளைகளும், 532 ஏ.டி.எம். மையங்களும் செயல்படுகின்றன.
ரிசர்வ் வங்கி இந்த நிதியாண்டில், 175 கிளைகள் தொடங்க இந்தியன் வங்கிக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் இந்தியா முழுவதிலும் இந்தியன் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 1950 ஆக இருக்கும். மேலும், 250 ஏ.டிஎம். மையங்களை தொடங்க உத்தேசித்துள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் புதிய கிளை:
இரண்டு மாதத்திற்குள் யாழ்ப்பாணம் நகரில் இந்தியன் வங்கிக் கிளை தொடங்கப்படும். பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வை கருத்தில் கொண்டு இந்த கிளை தொடங்கப்படுகிறது. அவர்களது மறுவாழ்விற்காக இந்திய அரசு கொடுக்கும் பணம் யாழ்ப்பாணம் கிளை மூலம் வழங்கப்படும்.
இலங்கையில்-கண்டி நகரத்திலும், சிங்கப்பூர், கொழும்பு, ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் இந்திய வங்கி கிளை திறக்கப்பட உள்ளது. இந்தோனேஷியா-ஜகர்தா நகரத்தில் இந்தியன் வங்கியின் பிரதிநிதி அலுவலகம் திறக்கவும் திட்டமிட்டுள்ளது இந்தியன் வங்கி.