விடுதி குளியறையில் பிணமாக தொங்கிய பி.இ மாணவி-பாலியல் கொடுமை நடந்ததா?
திருச்சி: திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியின் குளியல் அறையில் மாணவி பிணமாகத் தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவருக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளதாக மர்ம பேக்சும் வந்துள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
மயிலாடுதுறை கொறநாடு பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதபாணி ராஜாவின் மகள் சரண்யா (18) திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று பகலில் தேர்வு எழுதிவிட்டு விடுதிக்குச் சென்ற சரண்யா, குளியலறையில் தூக்கில் தொங்கினார்.
இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளை சந்தித்து சரண்யாவின் சகோதரி அகல்யா புகார் கொடுத்தார். அதில், தனது தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாகவும், சாவு குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறும் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாகவும் கூறியுள்ளர்.
மேலும் இது தொடர்பாக கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் மற்றும் மாணவியின் உறவினர்கள், கல்லூரி மாணவர்கள் சிலர் சரண்யாவின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே ஒரு மர்மமான பேக்ஸ் கடிதம் மாணவியின் பெற்றோருக்கு வந்துள்ளது. சரண்யாவின் தோழி என்று பெயர் குறிப்பிடாமல் அனுப்பப்பட்டுள்ள அந்த பேக்சில், சரண்யா தற்கொலை செய்யவில்லை. அவர் இறக்கும் முன் அவருக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ள தகவல் உண்மையா எனபது பிரேதப் பரிசோதனையில் தெரிந்துவிடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.