அயோத்தி தீர்ப்பு: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்-பிரதமர்
தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பிளவை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபடும் தீய சக்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
அயோத்தி தீர்ப்பு வெளியானவுடன் உள்நாட்டு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் தலைமையில் கூடியது. இக்கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மன்மோகன் சிங்,
அயோத்தி தீர்ப்புக்குப் பிறகு மக்கள் அமைதி காக்க வேண்டும். சில விரும்பத்தகாத சக்திகள், இரு வகுப்பினரிடையே பிளவை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபடுவதை மக்கள் முறியடிக்க வேண்டும். வதந்திகளை பரப்புவோர் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாட்டில் அமைதி, மதநல்லிணக்கத்தை பேணிக்காக்க அரசு முழுமூச்சுடன் உறுதிபூண்டுள்ளது. அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சமூகத்தில் பிளவை ஏற்படுத்த நினைக்கும் சக்திகளுக்கு நாட்டு மக்கள் அடிபணிந்துவிடக் கூடாது என்றார்.
பின்னர் வெளியிட்ட அறிக்கையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச், ராம்ஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்ப்பை அளித்துள்ளது. இது நீண்ட கால சட்ட போராட்டத்தின் முடிவாகும்.
இந்த முடிவு குறித்து பல்வேறு தரப்பு மக்களுக்கும் பல்வேறுவகையான கருத்துக்கள் இருக்கும்.
நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பை கவனமுடன் ஆராய வேண்டியது அவசியமாகும். மூன்று மாத காலத்திற்கு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிபதிகளே தெரிவித்துள்ளனர். மேலும் தேவைப்படுவோர் அப்பீல் செய்யவும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
தீர்ப்பில் பல்வேறு கருத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே அப்பீல் மனுசெய்ய உள்ள கால அவகாசம், உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள 3 மாத காலத்திற்கு தற்போதைய நிலை தொடர நாம் அமைதியுடன் அனுமதிக்க வேண்டும்.
இந்திய மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும், நமது நாட்டின் சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மீது பெரும் நம்பிக்கை உள்ளது.
இருப்பினும் நமது சமூ்கத்தின் கட்டமைப்பை சீர்குலைக்க முயலும் விஷ சக்திகள் தங்களது விளையாட்டைக் காட்ட முனையலாம். அவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். எனவே இதுபோன்ற சக்திகள், அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்க முயலும்போது அதற்கு நாட்டு மக்கள் இடம் தரக் கூடாது.
வதந்திகளை ஒருபோதும் நம்ப வேண்டாம். சமூகங்களிக்கிடையிலான நல்லிணக்கத்தை குலைக்க முயல்வோரிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்.
அனைவரும் அமைதியுடன் இருந்து, அனைத்து மதங்களும், அனைத்து மத நம்பிக்கைகளும் உயர்ந்தவை என்பதை காட்ட வேண்டும்.
அமைதி, சட்டம் ஒழுங்கு, நல்லிணக்கத்தைக் கட்டிக் காட்ட அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது.
நமது நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் வகையில், நாட்டு மக்கள் இந்தத் தீர்ப்பை அணுகுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறியுள்ளார் பிரதமர்.
தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு:
அயோத்தி வழக்கில் தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ இல்லை. இந்தத் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில்,
இதுபோன்ற பிரச்சனைகள், ஒன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். அல்லது நீதிமன்றம் மூலம் தீர்க்கப்பட வேண்டும். இப்போது நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தத் தீர்ப்பில் உடன்பாடு இல்லாதவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் திறந்தே உள்ளன. எனவே அமைதிக்கும் மத நல்லிணக்கத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம்.
தீர்ப்பை வரவேற்கும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் பாட்டாசு வெடித்தது குறித்து கேட்டபோது, மகிழ்ச்சியைக் கொண்டாட பல வழிகள் உள்ளன. ராமர் வெற்றி, தோல்வியை சமமாகப் பாவித்து அமைதி காத்தார். ராம பக்தர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.