காமன்வெல்த் போட்டி-டெல்லியை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு
டெல்லி: டெல்லியில் வலம் வந்த பிச்சைக்காரர்கள் யாரையும் அங்கு காணவில்லை. அனைவரையும் கட்டாயப்படுத்தி நகரிலிருந்து வெளியேற்றியுள்ளதாக டெல்லி அரசு மீது மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லி சாலைகள், வணிக வளாகங்களை வலம் வரும் பிச்சைக்காரர்கள், பலூன் விற்போர், பத்திரிக்கை விற்போர், பேனா, மலிவு விலைப் பொருட்களை விற்போர் என யாரையுமே பார்க்க முடியவில்லை. அனைவரும் மாயமாகியுள்ளனர்.
பிச்சைக்காரர்கள், சிறு பொருள் வியாபாரிகள் என யாருமே இல்லாமல் காணப்படுகிறது டெல்லி. அனைவரும் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இவர்களை டெல்லி அரசுதான் கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை டெல்லியை விட்டு வெளியேற்றியுள்ள மாநில அரசு, காமன்வெல்த் போட்டிகள் முடியும்வரை டெல்லி பக்கமே வரக் கூடாது என எச்சரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இந்தோ குளோபல் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பின் இந்து பிரகாஷ் சிங் கூறுகையில், எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை ரயில்களில் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், போட்டிகள் முடியும் வரை டெல்லிக்கு வரக் கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏழைகள் மீது கிட்டத்தட்ட பயங்கரவாதத்தை பிரயோகித்துள்ளது டெல்லி காங்கிரஸ் அரசு. இது மிகவும் கொடுமையான, மனிதநேயமற்ற செயல் என்று அவர் கூறினார்.