நானும், தா.பாண்டியனெல்லாம் அரசுக்கு வேண்டாதவர்கள்-இளங்கோவன் புலம்பல்
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அதிரடிப் படை போலீஸாரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஈரோட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதை இளங்கோவன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
வீரப்பனை பிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஹெலிகாப்டர் மூலம் எப்போதோ எளிதாகப் பிடித்திருக்க முடியும். தேடுதல் வேட்டை என்ற பெயரில் அரசியல் நடத்தப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட அதிரடிப்படை போலீஸார், தேடுதல் என்ற பெயரில் உல்லாசப் பயணம் சென்றனர்.
காட்டுக்கு அரசன் போல நடந்து, மிருகங்களை வேட்டையாடி விருந்து சாப்பிட்டு, மலைவாழ் மக்களிடம் மிருகத்தைவிடக் கேவலமாக நடந்து கொண்டனர். வீரப்பனை பிடித்த போலீஸாருக்குப் பதக்கம், பரிசு, பதவி உயர்வு வழங்கப்பட்டன. ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இழப்பீடு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் இப்போது வாரிசுகள் சொன்னால்தான் வேலை நடக்கிறது. வேண்டாதவர்களின் கோரிக்கைகள் வேண்டாதவைதான். தா.பாண்டியன், இளங்கோவன் போன்றவர்கள் வேண்டாதவர்கள். இவர்கள் சொல்வதை ஏன் செய்ய வேண்டும் என்று கருதுவதால்தான், இன்னும் இந்த மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றார் இளங்கோவன்.