'மிரட்டலை சொல்லி சுய விளம்பரம் தேடும் ஜெ': மு.க.அழகிரி
மதுரை: மதுரைக் கூட்டத்திற்கு சுய விளம்பரம் தேடுவதற்காகவே தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறிக் கொண்டிருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும், மதுரை தொகுதி எம்.பியுமான மு.க.அழகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து குறை கேட்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு மதுரை கீழமாத்தூர் கிராமத்திற்கு சென்றார். அங்கு பொதுமக்களிடம் இருந்து பெற்ற அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்து நடவடிக்கை அதிகாரிகளுக்கு எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி மனு கொடுத்த 12 நாட்களுக்குள் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கீழமாத்தூர் கிராமத்தில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட அழகிரி, 446 பேருக்கு உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். அதில் ஒரு பகுதியாக பழைய சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி அழகுப்படுத்தும் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்கு ரூ.13 கோடி செலவில் அடிக்கல் நாட்டினேன்.
மேலும் மதுரை மேலவாசலில் குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்து இருக்கிறேன்.
மக்களின் குறைகளை கேட்பதற்காக நானே நேரடியாக சென்று மனுக்கள் பெற்று வருகிறேன். அந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காண்கின்றேன். இதனால் எனக்கு மன திருப்தி ஏற்படுகிறது. அதே போல் தங்கள் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டதால் பொதுமக்களும் மன நிறைவு பெறுகின்றனர் என்றார்.
வரும் 18ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளாரே என்று கேட்டதற்கு,
'குண்டு' மேல் குண்டுபோட முடியுமா? என்று ஏற்கனவே நான் கூறியருக்கிறேன். இப்போதும் அதையே தான் கூறுகிறேன் என்றார்.
மீண்டும், மீண்டும் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக கூறி வருகிறாரே என்று கேட்டதற்கு,
ஜெயலலிதாவைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு இந்த மிரட்டல் புகார் பின்னணி குறித்து நன்றாகவே தெரியும். சுய விளம்பரம் தேடிக் கொள்ளவே அவர் இப்படி கூறி வருகிறார். அல்லது மதுரை கூட்டத்தை ரத்து செய்வதற்கு கூட இதனை ஒரு காரணமாக கூறி வருகிறார் என்று சொல்லலாம் என்றார்.