எதியூரப்பாவுக்கு எதிராக 7 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்கள்: ஓசூரில் கூடி ரகசிய ஆலோசனை
முதலில் அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி ஆகியோர் போர்க் கொடி உயர்த்தி ஆட்சியையே கவிழ்க்கத் துணிந்தனர்.
இதையடுத்து அவர்களது உத்தரவுக்கு அடிபணிந்து சில அமைச்சர்களை நீக்கி, அவர்களுடன் சமரசம் செய்து கொண்டார் எதியூரப்பா. சமரசம் உருவாக பாஜக தலைமையும் உதவியது.
இந் நிலையில் கடந்த மாதம் எதியூரப்பா தனது அமைச்சரவையை மாற்றினார். 3 அமைச்சர்களை நீக்கிவிட்டு புதிதாக 6 பேரை சேர்த்தார். இதில் ரெட்டி சகோதரக்களின் நெருக்கடியால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ஷோபாவும் அடக்கம்.
ஷோபாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி தந்ததற்கும், தங்களுக்கு முக்கியத் துறை தரப்படாததற்கும் 7 அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே போல தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத 17 பாஜக எம்எல்ஏக்களும், அமைச்சர் பதவியை இழந்த 3 அமைச்சர்களும் எதியூரப்பாவுக்கு எதிராகக் கிளம்பியுள்ளனர்.
இந்த 27 பேரும் அமைச்சர்கள் ரேணுகாச்சாரியா (இவர் ஒரு நர்சுடன் அரசல் புரசலாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது), பாலச்சந்திரா, நரேந்திரா ஆகியோர் தலைமையில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக இப்போது போர்கொடி உயர்த்தியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் ஓசூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இன்று ரகசிய ஆலோசனை நடத்தினர். இதில் 7 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
எதியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய முதல்வரை நியமிப்பது அல்லது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து புதிய அரசை உருவாக்குவது குறித்து இவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த எதியூரப்பா பாஜக மாநிலத் தலைவர் ஈஸ்வரப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர்கள் அனைவரும் எதியூரப்பா தலைமையில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்று அந்த அமைப்பின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த 27 பேரையும் மீண்டும் தன்னை ஆதரிக்க வைக்க ஆர்எஸ்எஸ்சின் உதவியை எதியூரப்பா நாடியுள்ளார்.
இதனால் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே எதியூரப்பா அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சரான கட்டா சுப்பிரமணிய நாயுடுவி்ன் மகன் நில மோசடி வழக்கில் கைதாகியுள்ளார். இதனால் நாயுடுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜகவிலேயே சில தலைவர்களும் எதிர்க் கட்சியினரும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து அவரை பதவி விலகுமாறு எதியூரப்பா சொல்லியும் அவர் விலக மறுப்பதாகக் கூறப்படுகிறது.