சட்டசபைத் தேர்தல் கூட்டணி-மக்கள் கருத்தறிய டூர் கிளம்புகிறார் விஜயகாந்த்
தேமுதிகவுக்கு அதிக பலம் இருப்பதாக நம்பப்படும் வட மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தை முதலில் மேற்கொள்கிறார். அக்டோபர் 15ம் தேதி கிருஷ்ணகிரியிலிருந்து தனது பயணத்தைத் தொடங்குகிறார். தென் மாவட்டங்களில் 2வது கட்ட பயணத்தை மேற்கொள்கிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் காலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களை சந்திக்கிறார்.
மச்சான் சுதீஷ் தயாரித்து, தானே இயக்கி, நடித்துள்ள விருத்தகிரி படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், சுற்றுப்பயணம் ஏற்பாட்டை விஜயகாந்த் அறிவிக்கவுள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து இடத்தில் பேசத் திட்டமிட்டுள்ளார் விஜயகாந்த். இதுகுறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் தகவல் போய் விட்டதாம். இடத்தைத் தேர்வு செய்யம்படி மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டங்களின்போது மக்களிடம் தேமுதிக கூட்டணி சேர்ந்து போட்டியிட வேண்டுமா அல்லது தனித்துப் போட்டியிட வேண்டுமா. யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்து மக்களிடமே கேட்டு ஒரு முடிவுக்கு வரத்
திட்டமிட்டுள்ளாராம் விஜயகாந்த்.
இந்த மக்கள் கருத்தறியும் பயணத்தை முடித்த பிறகே அவர் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் என்று தெரிகிறது.
ஆனால் ஏற்கனவே கூட்டணியை முடிவு செய்து விட்ட விஜயகாந்த், மக்களிடம் தான் முடிவு செய்துள்ள கூட்டணி குறித்து சாதகமாக பதில் வருகிறதா என்று ஆழம் பார்க்கும் வகையிலேயே இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும்-கிருஷ்ணசாமி:
இதற்கிடையே, விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்புடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ் எப்போதும் ஒரு நிலையான முடிவை எடுக்க மாட்டார். அவரை யாரும் நம்ப மாட்டார்கள். அவரை நம்ப யாரும் தயாராக இல்லை. சமூக நீதி காவலர் ராமதாஸ் என கூறுகின்றனர். சமூக நீதி காவலர் ராமதாஸ் கிடையாது. அவருக்கு அந்த தகுதி கிடையாது என்றார்.