தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்க தடை-கலைஞர் வீட்டு வசதி திட்டத்திற்கு சிக்கல்!
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் வீ்ட்டு வசதி திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
முதல்வரின் கனவு திட்டமான கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகமும் முயற்சி எடுத்து வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 207 சதுர அடியில் வீடு கட்ட ரூ.75 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. வீடுகள் கட்ட 9 மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டாலும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து வீடுகளையும் கட்டி முடிக்க பயனாளிகளுக்கு உதவ வேண்டுமென அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது.
ஓபபந்தகாரர்கள் இல்லாமல் பயனாளிகள் மூலமாகவே வீடுகள் கட்டப்படுவதால் அதிகாரிகள் வீடுகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு 4 தவணையாக பணம் வழங்குகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்க ஐகோர்ட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் மணல் எடுக்க அரசும் தடை விதித்துள்ளது.
இதனால் வீடுகள் கட்ட மாட்டு வண்டியில் மணல் அள்ளினால் கூட போலீசார் வழக்கு பதிகின்றனர். இதனால் ஆற்றில் இருந்து மணல் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் அவசரப்படுவதால் கலைஞர் வீட்டு வசதி திட்ட பயனாளிகளும் ஓடை மணலை பயன்படுத்தி வீடுகள் கட்டுகின்றனர். ஆனால் ஓடை மணலில் வீடுகள் கட்டினால் பயனாளிகளுக்கு பில்லை செட்டில் செய்ய கூடாது என அதிகாரிகள் கண்டிப்பு காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
பிறகு எந்த மணலை எடுத்து எப்படி வீடு கட்டுவது என்று பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் பயனாளிகள்.