For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல்புகளுக்கு பதில் டியூப் லைட்: தமிழக அரசு அறிவுரை

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் மின்துறை சார்பிலான திட்டங்களில் பல்புகளுக்குப் பதிலாக டியூப் லைட்களை பயன்படுத்துவதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துமாறும், பறக்கும் படை மூலமாக மின்சாரத் திருட்டுகளைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், முதல்வர் கருணாநிதி இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழகத்தில் மின்சார வினியோகத்தின் தற்போதைய நிலை, உருவாக்கப்பட்டு வரும் புதிய மின் திட்டங்களின் முன்னேற்ற நிலை ஆகியவை குறித்து மின்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

முதலில், மின் வினியோகத்தில் இழப்பைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பல்புகளுக்குப் பதிலாக குழல் விளக்குகளை உபயோகப்படுத்துவதன் மூலம் மின்சார சேமிப்பு ஏற்படுத்தும் திட்டம் தற்போது கடலூர் மாவட்டத்தில் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டு வருவதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென்றும்; பறக்கும் படை மூலமாக மின்சாரத் திருட்டுகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் வழங்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர், இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும்; தரமான பம்ப்செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

பம்ப் செட்டுகளில் மீட்டர்கள் பொருத்துவது மின்சாரக் கட்டணம் வசூலிப்பதற்கு என சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றும், இதில் எந்தவொரு உண்மையும் இல்லை என்றும், மீட்டர் பொருத்துவது என்பது, புதிதாக பொருத்தப்படவிருக்கும் பம்ப் செட்டுகளினால் எந்த அளவிற்கு மின்சாரம் சேமிக்கப்படும் என்பதைக் கண்டறிவதற்காக மட்டுமே என்றும்,

தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின் சாரம் வழங்கும் திட்டத்தில் எந்தவொரு மாற்றமுமில்லை என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் மீண்டும் தெளிவுபடுத்துமாறு முதல்வர் கருணாநிதி, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மாநிலத்தின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 600 மெகாவாட் மின்சாரத்தினை வெளிச் சந்தையிலிருந்து தொடர்ந்து வாங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வல்லூர், நெய்வேலியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மின் திட்டங்களின் மூலமாக, 2011 மார்ச் மாதத்திற்குள் 800 மெகாவாட் மின்சாரமும், 2011-2012ல் வடசென்னை, மேட்டூர், வல்லூர்-2 ஆகியவற்றின் மூலமாகவும், மற்ற புனல் மின் திட்டங்களின் மூலமாகவும் 2,500 மெகா வாட் மின்சாரமும் கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று முதல்வர் வலியுறுத்தினார்.

தற்சமயம் நடைமுறையில் உள்ள மின் வினியோகத்தில் எவ்விதக் குறைபாடுமின்றி மின் வினியோகத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறும், மேலும் மின் உபயோகிப்பாளர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தலைமைச் செயலாளர் மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் டேவிதார், மின் வாரியத் தலைவர் சி.பி. சிங் மற்றும் மின் வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X