For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்-காங்

By Chakra
Google Oneindia Tamil News

Babri Mosque Demolition
டெல்லி & ரேபரேலி: பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ், விஎச்பி, பாஜக, பஜ்ரங் தள் தொண்டர்களால் இடிக்கப்பட்டது.

இதையடுத்து அத்வானி உள்பட பல்வேறு தலைவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அஞ்சு குப்தாவின் சாட்சியம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானியுடன் இருந்த அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் அளித்துள்ள சாட்சியத்தில், அத்வானி மற்றும் மற்றும் சங் பரிவார் தலைவர்கள் மசூதியை இடிக்க தூண்டிவிடும் வகையில் பேசியதாக கூறியுள்ளார்.

இந் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை மாஜிஸ்திரேட் குலாப் சிங் மாற்றப்பட்டுள்ளார். இதனால் அந்தப் பதவி காலியாக உள்ளது.

இந்த பணியிடத்தை நிரப்புமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி கடிதம் எழுதியும் இதுவரை புதிய மாஜிஸ்திரேட் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த மசூதி இடிப்பு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிமன்றம் வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துளளது.

மசூதி இடிப்பு குற்றவாளிகள்-தண்டிக்கப்பட வேண்டும்:

இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் அயோத்தி நிலப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணும் முயற்சியை வரவேற்பதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இதில் அயோத்தி தீர்ப்பு குறித்தும் காஷ்மீர் நிலைமை குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விரிவாக விளக்கினார்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அயோத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணும் முயற்சியை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் நீதியின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பாபர் மசூதி இடிப்பை தீர்ப்பு மன்னிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை காங்கிரஸ் மதிக்கிறது. இருந்தபோதிலும், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் நிலை இருப்பதால், சுப்ரீம் கோர்ட்டின் இறுதி முடிவுக்காக நாம் காத்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இக் கூட்டத்துக்குப்பின் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி, அயோத்தி பிரச்சனையில் சுமூகத் தீர்வுக்கான முயற்சியை வரவேற்கும் அதே நேரத்தில் அதற்கான முயற்சி எதிலும் காங்கிரஸ் கட்சி ஈடுபடாது.

மிகவும் அவமானகரமான, கிரிமினல் குற்ற நடவடிக்கையான பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாகவுள்ளது என்றார்.

காங்கிரஸ் குழப்புகிறது-பாஜக:

இதற்கிடையே, அயோத்தி நில விவகார தீர்ப்பையும் பாபர் மசூதி இடிப்பு வழக்கையும் தொடர்பு படுத்த வேண்டாம் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், அயோத்தி நில விவகாரம் என்பது சிவில் வழக்கு, பாபர் மசூதி இடிப்பு என்பது கிரிமினல் வழக்கு. இந்த இரண்டையும் சேர்த்துப் பேசி மக்களைக் குழப்ப காங்கிரஸ் முயல்கிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X