கனடாவை நோக்கி அகதிகளுடன் இன்னும் ஒரு கப்பல்?
டொரன்டோ: இலங்கை தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு இன்னும் ஒரு கப்பல் கனடாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் ஈழத்துக்கான இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனித்த பிறகு, இங்கையில் தமிழர் வாழ முடியாத நெருக்கடியான சூழல் நிலவுகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வாழப் பிடிக்காமல், தோணிகள், படகுகள், சிறுகப்பல்களில் வேறுபகுதிகளுக்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். பிழைப்புக்காகச் செல்லும் இவர்களை, "விடுதலைப் புலிகளாக இருக்கக் கூடும், எச்சரிக்கையாக இறுங்கள்" என இந்தியா எச்சரிக்கை அனுப்பியுள்ளதால், பக்கத்து நாடுகள் எவையும் அவர்களை ஏற்க மறுக்கின்றன.
எனவே கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர் இலங்கை தமிழர்கள்.
ஏற்கெனவே சன் ஸீ என்ற கப்பலில் 300க்கும் அதிகமான தமிழர்கள் அகதிகளாக கனடாவில் தஞ்சமடைந்தனர். அவர்களை துறைமுகப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்க வைத்துள்ள கனடா, சிலருக்கு அகதி அந்தஸ்தும் வழங்கியுள்ளது. மற்றவர்களுக்கும் அந்த அந்தஸ்தை வழங்க பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மேலும் ஒரு கப்பல் அகதிகளுடன் கனடா நோக்கி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கனடாவில் பனிக்காலம் துவங்கவுள்ளது. இந்த சீஸனின் நீர்நிலைகள் கூட உறைந்துபோகும். கடல் பகுதிகள் ஆங்காங்கே உறைந்துவிடும்.
எனவே அதற்கு முன் இந்தக் கப்பல் கனடா வரலாம் என எதிர்ப்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கனடிய போலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்னும் இரண்டு வாரத்துக்குள் இந்தக் கப்பல் வரக்கூடும் என தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கனடிய வெளியுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் லோரா மார்கேய்ல், கூறுகையில், "கிடைத்துள்ள தகவலை ஆராய்ந்து வருகிறோம். ஒருவேளை அந்தக் கப்பல் வேறு பகுதிக்கும் கூட செல்லலாம். இருந்தாலும் நாங்கள் எச்சரிக்கையுடன் கண்காணிக்கிறோம்" , என்றார்.