திருச்சியில் காங்கிரஸ் தனது பலத்தை காட்டும்-ஜி.கே.வாசன்
திருச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்சோனியா பங்கேற்கும் முப்பெரும் விழா நாளை திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான மேடை அமைக்கும் பணி, தொண்டர்கள் அமருவதற்கான பகுதிகளை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இவற்றை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், மாநிலத் தலைவர் தங்கபாலு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாநிலத் தலைவர் தங்கபாலு, திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், வடக்கு மாவட்டத் தலைவர் எம்.எல்.ஏ., ராஜசேகரன், முன்னாள் மேயர் சாருபாலா, முன்னாள் மாவட்டத் தலைவர் நந்தா செந்தில்வேல், சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில்,
திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் 125 ம் ஆண்டு விழா சிறப்பு பொதுக் கூட்டம் , நான்காவது முறையாக கட்சித் தலைவராக பொறுப்பேற்ற சோனியாவுக்கு பாராட்டு விழா, முன்னாள் மத்தியமைச்சர் திருநாவுக்கரசர் ஆதரவாளர் கட்சியில் இணையும் விழா ஆகியவை நடைபெற உள்ளது.
இந்த விழாவில், தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழா வரும் சட்ட மன்ற தேர்தல் நேரத்தை கருத்தில் கொண்டு காங்கிரஸ் பலத்தைக் காட்டும் வகையில் அமைய உள்ளது என்றார்.