நெல்லை அதிமுகவில் கோஷ்டி மோதல்-2 பேரின் மண்டை உடைந்தது
நெல்லை: நெல்லையில் நடந்த கோஷ்டி மோதலில் அதிமுகவினர் இருவர் மண்டை உடைந்தது.
மதுரையில் வரும் 18ம் தேதி திமுக அரசை கண்டித்து அதிமுக தலைவி ஜெ தலைமையில் ஆர்பாட்டம் நடக்கிறது. இதில் தென்மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான அதிமுகவினரை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் மாவட்டம் வாரியாக சுற்றுபயணம் செய்து வருகின்றனர்.
நேற்று நெல்லை புறநகர் மாவட்டத்தின் சார்பில் தென்காசியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நெல்லை மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தேவர்குளத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மூன்று கார்களில் சென்றனர்.
கூட்டம் முடிந்த நெல்லை வந்த அவர்கள் டவுண் ஆர்ச் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். தேவர்குளத்தை சேர்ந்த ஆதர் முத்துராஜ், அளவந்தான்குளம் இசக்கிமுத்து, ஆகியோருக்கும் அதிமுகவில் உள்ள மற்றொரு கோஷ்டியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது 20 பேர் கொண்ட கும்பல் இருவரையும் உருட்டு கட்டை மற்றும் கம்பியால் தாக்கிவிட்டு காரில் தப்பினர். இதில் அவர்கள் மண்டை உடைந்தது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.