தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி விட்டன-குரேஷி
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பூர்வாங்க ஆயத்தப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியிலிருந்து சென்னை வந்தார் குரேஷி. அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கு கால அவகாசம் அதிகமாக உள்ளது. ஆனாலும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம்.
மேலவை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு இருக்கும் எதிர்ப்பு குறித்து தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்தோம். இதில் பெரும்பாலான கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவில் திருப்பதியாக உள்ளதாக தெரிவித்தனர். ஒரு சில கட்சிகள் வாக்குப்பதிவின் போது சரியாக ஓட்டு பதிவானதா என்பதை அறிய ரசீது வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளன.
இது தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திர பராமரிப்பு தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தரும். அந்த அறிக்கை கிடைத்த பின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
சமீபகாலமாக தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம், அச்சுறுத்தல் அதிகமாக நடப்பது கவலை அளிக்கிறது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பீகாரில் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக கூறப்படுகிறது.
இதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். பீகாரில் அனைத்துக் கட்சி குழு, தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் ஒருங்கிணைந்து இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்திலும் புகார்கள் வருவதால் இங்கும் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.