19 ஆண்டுகளுக்குப் பிறகு ஐநா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராகிறது இந்தியா!
நாளை ஐநாவின் பொது அவையில் நடக்கும் தேர்தல் மூலம் இந்தப் பதவியில் அமர்கிறது இந்தியா. இந்த தேர்தலிலிருந்து கஜகஸ்தான் திடீரென்று விலகிக் கொண்டதால், ஆசிய பிராந்தியத்திலிருந்து இந்தியா உறுப்பினராவது எளிதாகியுள்ளது.
இந்த பதவிக்காக ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் ஒரு நாடு தேர்வு செய்யப்படும். ஏற்கெனவே இந்தப் பொறுப்பில் உள்ள நாடுகள்: ஆஸ்திரியா, ஜப்பான், மெக்ஸிகோ, துருக்கி மற்றும் உகான்டா. இவற்றுக்கு பதில்தான் புதிய உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்படுகின்றன.
அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா கண்டங்களின் சார்பில் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்துக்கான இரண்டு உறுப்பினர் பதவிக்கு கனடா, ஜெர்மனி மற்றும் போர்ச்சுகல் நாடுகள் மோதுகின்றன.
ஆப்ரிக்காவுக்கு தென்னாப்பிரிக்காவும், ஆசியாவுக்கு இந்தியாவும் உறுப்பினர் பதவியைப் பெறுகின்றன. முன்னதாக இந்தப்பதவிக்காக இந்தியாவுடன் மோதிய கஜகஸ்தான் விலகிக் கொண்டது.
இதன் மூலம் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா இணைந்து BRIC அமைப்பாக செயல்படவிருக்கிறது. "சர்வதேச அளவில் மிகப்பெரிய மாறுதல்களை இந்த நாடுகள் சாதிக்கும்" என்கிறார் ஐநாவுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரி.
இந்த உறுப்பினர் பதவிக்காக கிட்டத்தட்ட கடந்த 3 ஆண்டுகளாக முயன்று வந்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவுக்கான தேர்தலில் ஜெர்மனி வென்றால், ஜி 4 அமைப்பில் உள்ள இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுமே ஓரணியில் நின்று நிரந்தர பாதுகாப்பு சபையில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.