ஓடும் பஸ்சில் இரு கல்லூரி மாணவர்கள் மோதல்- கத்திக்குத்து: 4 பேர் காயம்- 2 பேர் கைது
சென்னை: சென்னையில் ஓடும் பஸ்சில் நந்தனம் கலைக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் மூண்டது. இதில் மாணவர்கள் கத்திகளால் தாக்கிக் கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தனம் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படிக்கும் மோகன், கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படிக்கும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சென்னை மந்தைவெளியில் இருந்து அம்பத்தூருக்கு மாநகர போக்குவரத்து கழக பஸ் 41டி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
அண்ணாநகர் புளு ஸ்டார் நிறுத்தத்தில் அந்த பஸ் நின்றபோது சில கல்லூரி மாணவர்கள் ஏறினர். அப்போது ஏற்கனவே பஸ்சில் இருந்த கல்லூரி மாணவர்களுடன் அவர்களுக்குத் தகராறு ஏற்பட்டது.
முதலில் அடிதடியில் இறங்கிய மாணவர்கள், திடீரென கத்திகளால் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.
இதில் 4 மாணவர்களுக்கு கத்திக் குத்து விழுந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து பஸ் நிறுத்தப்பட்டது, பிற பயணிகள் இறங்கி ஓடினர்.
தகவல் அறிந்து அண்ணாநகர் உதவி கமிஷனர் மதி தலைமையில் போலீஸ் படை வந்தது. அதற்குள் மாணவர்கள் தப்பியோடிவிட்டனர்.
கத்திக் குத்தில் காயமடைந்த சுரேஷ் (19), சனத்குமார் (19), அஸ்வின் (20), உமாபதி (20) ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நால்வரும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தனம் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படிக்கும் மோகன், கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படிக்கும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.