போர்க்குற்றவாளி ராஜபக்சே காமன்வெல்த் போட்டியை நிறைவு செய்வதா? - பழ.நெடுமாறன்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் காமல்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராக ராசபக்சேயை இந்திய அரசு அழைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பிரிட்டன் உள்பட காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த பல நாடுகளாலும் மற்றும் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளாலும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியவர் எனப் பகிரங்கமாகக் கண்டிக்கப்பட்டவர் இராசபக்சே.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இராசேந்திர சச்சார் உட்பட பத்திற்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இராசபக்சே ஒரு போர்க் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருக்கிறது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் அமைத்த விசாரணைக் குழுவை தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து உலக நாடுகளின் அமைப்பையே அவமதித்தவர்.
இத்தகைய ஒருவரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதி விழாவை முடித்துவைக்க இந்திய அரசு அழைத்திருப்பது தமிழக மக்களின் வெந்த உள்ளங்களில் வேலைச் செருகுவது போன்ற வேதனையைத் தந்துள்ளது.
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்தவர் மட்டுமல்ல. முள்வேலி முகாம்களில் இன்னமும் 30,000க்கும் மேற்பட்டத் தமிழர்களை அடைத்து வைத்துச் சித்ரவதை செய்வதாக அண்மையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் எழுத்துப் பூர்வமான புகார் அளித்திருக்கிறார்.
தமிழர்களின் உணர்வுகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சர்வதேச நாடுகளால் மனித உரிமை மீறல்களைச் செய்த போர்க்குற்றவாளி எனக் கண்டிக்கப்பட்ட ஒருவரை காமன்வெல்த் நிறைவு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்த இந்திய அரசின் செயலை தமிழர்களும், மனித நேயம் படைத்தவர்களும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று அந்த அறிக்கையில் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
தமிழக எம்.பிக்கள் புறக்கணிக்க திருமா. கோரிக்கை
காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ள இந்தியா அழைப்பு விடுத்துள்ளதால் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் போட்டியில் கலந்து கொள்வதை புறக்கணிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,
டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபக்சேவை இந்திய அரசு அழைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராஜபக்சேவை புதுடெல்லிக்கு அழைத்துச் சிறப்பிக்க விரும்பும் இந்திய அரசின் அணுகுமுறையானது சுமார் பத்து கோடிக்கும் மேலான ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஒரு போர்க் குற்றவாளிக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது அத்தகைய போர்க் குற்றத்தில் இந்திய அரசின் பங்களிப்பு எத்தகையது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
ராஜபக்சேவை அழைக்கும் இந்த முடிவை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழினத்தின் சார்பில் வற்புறுத்துகிறோம். நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு எனக்கும் அழைப்பு வந்துள்ளது. ஆனால் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் அவ்விழாவை நான் புறக்கணிக்கிறேன்.
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தமிழின ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அவ்விழாவைப் புறக்கணிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.