ஸ்காட்லாந்தில் 21 வயது இந்தியர் மீது இனவெறி தாக்குதல்
லண்டன்: பெண்ணைத் தாக்கியவரைக் கண்டித்ததால் ஸ்காட்லாந்தில் இந்திய இளைஞரை ஒரு கும்பல் இனவெறியுடன் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.
அவரது பெயர் பங்கஜ் ராவத். 21 வயதான இவர் எடின்பர்க் நகரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல், பெண் ஒருவரைத் தாக்க முயன்றது. இதையடுத்து அங்கு விரைந்த ராவத், அப்பெண்ணைக் காக்க முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் ராவத்தை பிடித்து அடிக்க ஆரம்பித்தது. இந்தியரா என்று கேட்டு தாக்கியுள்ளனர். இதில் ராவத்தின் முகத்தில் காயம் ஏற்பட்டது.
அந்தக் கும்பலில் ஐந்து பேர் வரை இருந்தனர். தொடர்ந்து தாக்கியதில் நிலை குலைந்தார் ராவத். பின்னர் அந்த கும்பல் ராவத்தைப் பார்த்து இந்திய நாயே என்று திட்டியபடி அங்கிருந்து போய் விட்டது.
காயமடைந்த ராவத்தை சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு மெட்டல் பிளேட் வைத்து அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
எடின்பர்க்கில் ஒரு வணிக வளாகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார் ராவத். தற்போது காயமடைந்திருப்பதால் அவருக்கு நான்கு வார விடுமுறை தேவைப்படுகிறது. ஆனால் அவ்வாறு விடுமுறையெல்லாம் கொடுக்க முடியாது என்று கூறி கடை உரிமையாளர் ராவத்தை வேலையை விட்டு நீக்கியுள்ளார்.