விஜயதசமி, ஆயுத பூஜையையொட்டி மக்களுக்கு ஜெ.வாழ்த்து
சென்னை: விஜயதசமி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
நவராத்திரி விழாவும், அதற்கு சிகரம் வைத்தாற்போல விஜயதசமி விழாவும் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
நவம் என்றால் ஒன்பது. நவராத்திரி நாட்களில் முதல் மூன்று நாட்கள் வெற்றி வேண்டி துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் கல்வி வேண்டி சரஸ்வதி தேவியையும் மக்கள் வழிபடுகிறார்கள்.
மகிஷாசுரனை தேவியானவள் ஒன்பது நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே விஜயதசமி.
கைவினை கலைஞர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், உழைப்பிற்கும், தொழிலுக்கும் மதிப்பளிக்கும் விதமாகவும் இந்த நாட்கள் அமைந்து இருக்கின்றன. வெற்றித் திருநாளாம் விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றியில் முடிவடையும் என்பது அனைவரது நம்பிக்கை.
இந்த நன்னாளில், அனைவரும் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று அமைதியுடன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தமிழகத்தில் விரைவில் நல்லாட்சி மலர மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து, தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.