காமன்வெல்த் ஊழலில் ராகுல்காந்தி, ஜோதிர் ஆதித்யா தலையீடு : நிதின் கட்காரி பேட்டி
புது டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான செலவு ரூ. 70 ஆயிரம் கோடியாகும். இதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்தது என்று பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார். இதை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டது. மேலும், மந்திரி சபை காமன்வெல்த் போட்டிகளுக்கு ரூ. 11 ஆயிரத்து 687 கோடி நிதிக்கு மட்டுமே ஒப்புதல் அளித்ததாகவும் அதில் கூறிப்பட்டுள்ளது.
இதையடுத்து நிதின் கட்காரி மீண்டும் பேட்டியளித்தபோது கூறியதாவது,
இந்த செலவுக்கு பிரதமர் பொறுப்பேற்கவில்லை என்றால் மந்திரி சபை தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். காமன்வெல்த் போட்டிகள் ஊழலில் மத்திய மந்திரிகளுக்கு சம்பந்தம் உள்ளது. ஏன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்யாவும் கூட இதில் தலையிட்டுள்ளனர். அவர்கள் தலையிட்டுள்ளனர் என்று தான் சொன்னேனே தவிர அவர்களுக்கு ஊழலில் தொடர்பு உள்ளது என்று கூறவில்லை.
இந்த ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் அவ்வாறு விசாரித்தால் நாங்கள் திரட்டி வைத்திருக்கும் ஆதாரங்களை எல்லாம் சமர்பிக்கத் தயார் என்று அவர் கூறினார்.