வருமான வரி அதிகாரிபோல நடித்து கொள்ளையடித்த முன்னாள் எம்எல்ஏ
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை அசோக்நகர் அயோத்தியா மண்டபம் அருகேயுள்ள மூர்த்தி தெருவில் வசிப்பவர் வெங்கட்ராகவன் (வயது 83). இவர் ஓய்வு பெற்ற மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி ஆவார். இவரது மனைவி பெயர் வேதவல்லி.
இவர்களுடன், இவர்களது மகன் பாஷ்யம், மருமகள் ராதா ஆகியோரும் வசித்து வந்தனர். பாஷ்யம் தனியார் கம்ப்iட்டர் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலைபார்த்து வந்தார். நேற்று அவர் வேலைக்கு போய்விட்டார்.
வருமானவரி அதிகாரிகள்போல்...
நேற்று பகல் 12 மணியளவில் வீட்டில் வெங்கட்ராகவன், வேதவல்லி மற்றும் ராதா ஆகியோர் இருந்தனர். அப்போது 2 ஆசாமிகள் வந்தனர். அவர்கள், தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டில் சோதனை போடுவது போல் நடித்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 25 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு அந்த ஆசாமிகள் இருவரும் அவசரமாக வெளியேறினார்கள். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடப் பார்த்தனர். உடனே வெங்கட்ராகவனும், அவரது மனைவி வேதவல்லியும், மருமகள் ராதாவும் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டுக்கொண்டு பின்னால் விரட்டி வந்தனர்.
மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றபோது ஒரு கொள்ளையனை கீழே பிடித்து தள்ளினார்கள். ஆனால் மற்றொருவன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டான். கீழே விழுந்த கொள்ளையனை அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து மடக்கிப் பிடித்தார்கள். பிடிபட்ட கொள்ளையன் அசோக்நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். அவனது பெயர் ரவிசங்கர் (42). சென்னை போரூரை சேர்ந்தவன்.
தப்பிச் சென்ற இன்னொரு கொள்ளையன் பெயர் இளஞ்செழியன். அவனும் போரூரை சேர்ந்தவன்தான். அவன்தான் கொள்ளையடித்த 25 சவரன் நகைகளை எடுத்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அவனைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
முன்னாள் எம்எல்ஏ ரவிசங்கர்
சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று மாலை 6 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்த வழக்கில் பிடிபட்டுள்ள ரவிசங்கர் முன்னாள் எம்.எல்.ஏ. என்றும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
ரவிசங்கரும், அவரது கூட்டாளியும் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து சம்பவம் நடந்த வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் இருந்துள்ளனர். வீடு முழுவதும் சோதனை போடுவதுபோல் நடித்துள்ளனர். முதலில் நகைகள் எதுவும் அவர்களிடம் சிக்கவில்லை. பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள் அவர்களிடம் சிக்கியதும், இந்த நகைகளை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்ட வெளியேறியுள்ளனர்.
ரவிசங்கரின் கூட்டாளி அவசரப்பட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்ததைப் பார்த்ததும் வேதவல்லியும், ராதாவும் சந்தேகம் கொண்டனர். அவர்கள் பின்னாலேயே விரட்டி வந்துள்ளனர்.
அப்போது வேதவல்லியும், ராதாவும், ரவிசங்கரை கீழே பிடித்து தள்ளியிருக்கிறார்கள். சுதாரித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏற போன அவரை, ரோட்டில் நின்ற ஆட்டோ டிரைவர்களும் மடக்கி பிடித்துள்ளனர்.
ரவிசங்கர் இதுபோல் சென்னையில் நிறையபேரிடம் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது என்றும், அதுபற்றி தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும் கமிஷனர் குறிப்பிட்டார்.
ரவிசங்கர் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். திமுகவின் சார்பில் நின்று ஜெயித்தார். இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குப் போனவர்.
இவர் சென்னையில் 15-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
நேற்று விடிய, விடிய அவரிடம் விசாரணை நடந்தது. போலீஸ் விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகைகளோடு தப்பி சென்றுள்ள அவரது கூட்டாளி இளஞ்செழியனையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.