கோ ஆப்டெக்ஸின் திருக்குறள் சேலை... கனிமொழி அறிமுகம்!
சென்னை: கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி கண்காட்சியில் 1330 குறள்கள் நெய்யப்பட்ட புதிய ரக பட்டுப் புடவையை கவிஞர் கனிமொழி எம்.பி. நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கைத்தறி கண்காட்சியை நடத்தி வருகிறது. அதேபோல், இந்த ஆண்டும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியை கவிஞர் கனிமொழி எம்.பி. நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது கைத்தறித் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், துறையின் முதன்மைச் செயலாளர் ஆர்.ராஜகோபால், கைத்தறி இயக்குனர் வெ.சந்திரசேகரன், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் சாந்தினி கபூர் ஆகியோர் உடனிருந்தனர்.
1,330 குறள்களும், திருவள்ளுவர் உருவமும் பொறிக்கப்பட்ட திருக்குறள் பட்டுச்சேலையும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இந்த புடவையை கனிமொழி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த கண்காட்சி அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம். விடுமுறை நாட்களும் கண்காட்சி திறந்திருக்கும். குறிப்பிட்ட சில ஜவுளி ரகங்களுக்கு தள்ளுபடி சலுகையும் அளிக்கப்படுகிறது.