சென்னையில் கிரெடிட் கார்டு மோசடி கும்பல் பிடிபட்டது!
சென்னை: நீண்ட நாட்களாக கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பலைக் கைது செய்தது சென்னை போலீஸ்.
சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனை சேர்ந்த காசிராஜன் என்பவர் யாரோ ஒரு நபர் தன்னுடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.20 ஆயிரம் பொருட்கள் வாங்கி மோசடி செய்து இருப்பதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
இதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கந்தசாமி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அப்துல் காதர் என்ற வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் கமல் கிரண், கோபிநாத், வெங்கட்ரங்கம், பாலாஜி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2009 வரை ஏராளமான கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மோசடித் தொகை குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.