தூத்துக்குடி அருகே கண்டெய்னர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 3 பேர் பலி
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பூரணச் சந்திரன். இவர் திருப்பூரில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் வைகுண்டராஜன் (16) உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். அவரது உடலை சொந்த ஊரான மூலக்கரையில் அடக்கம் செய்வதற்காக திருப்பூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குறுக்குச்சாலை அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்வதற்காக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது ஆம்புலன்ஸ் வேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே பூரணச் சந்திரனினன் உறவினர் சதாசிவம் (55) உயிரிழந்தார். மேலும், பூரணச் சந்திரனின் மனைவி ஜெயபாரதி (39), ஆம்புலன்ஸ் கிளீனர் அருள்(25) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பூரணச் சந்திரன் மற்றும் அவரது மகள்கள் அஸ்வினி (13), மேகலா (17), அவினாசியைச் சேர்ந்த சேசுராஜ் (32), ஆம்புலன்ஸ் டிரைவர் திருப்பூர் ஆனந்தராஜ்(40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.