லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை கிடையாது-சுப்ரீம் கோர்ட்
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி நடராஜ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், புதிய டிஜிபியை தேர்வு செய்யுமாறும் அது உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று நீதிபதிகள் ஜெயின், கபூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜராகிய வக்கீல் பி.எஸ்.ராமன், விதிமுறைகளுக்கு உட்பட்டே லத்திகா சரண் நியமனம் நடந்துள்ளது. எனவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், டிஜிபிக்கள் நியமனம் தொடர்பாக சில விதிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது. அது கடைப்பிடிக்கப்படவில்லை என்று காரணத்தால்தான் லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின்உத்தரவுக்கு தடை விதிக்க நாங்கள் விரும்பவில்லை என்று கூறினர். பின்னர் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.