For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாடா என்றால் வாடா என்பேன், போடா என்றால் போடா என்பேன்-விஜயகாந்த்

Google Oneindia Tamil News

சென்னை: எனக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று கேட்டு மரியாதை குறைவாக பேசுகின்றனர். நீங்கள் போடா என்றால் நானும் போடா என்பேன்; வாடா என்றால் நானும் வாடா என்பேன். காரணம் எனக்கு பயம் கிடையாது என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது விஜயகாந்த் பேசுகையில்,

எனக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று கேட்டு மரியாதை குறைவாக பேசுகின்றனர். மக்களின் வறுமையை ஒழித்து வருமானத்திற்கு வழிசெய்வதுதான் எனது கொள்கை. நீங்கள் போடா என்றால் நானும் போடா என்பேன்; வாடா என்றால் நானும் வாடா என்பேன். காரணம் எனக்கு பயம் கிடையாது.

எங்கள் கட்சிக்கு கொள்கை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள். கொள்கை என்ன கொள்கை; இன்றைய பிரச்சினை எதுவோ அதை தீர்ப்பது தான் கொள்கை. பூனை வெள்ளையா? கருப்பா? என்று பார்க்க கூடாது. எலியை பிடிக்கிறதா? என்பது தான் முக்கியம்.

இன்றைய பிரச்சினை விலைவாசி உயர்வு. இதனை கட்டுப்படுத்த வேண்டும். வறுமையை ஒழிக்க வேண்டும், வருமானத்தை பெருக்க வேண்டும் இது தான் கொள்கை.

கட்சி ஆரம்பித்தவுடன் விஜயகாந்த் முதல்வராக நினைக்கிறார் என்று துணை முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஆம், தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று நான் நினைப்பது உண்மைதான். ஆனால் துணை முதல்வர் ஸ்டாலினோ அல்லது மத்திய அமைச்சர் மு.க.அழகிரியோ தாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று அறிவிக்கத் தயாரா? அணையப்போகும் விளக்குதான் சுடர் விட்டு எரியும்.

காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்று 1967 ல் அண்ணா விரட்டினார். இன்றோ கருணாநிதி, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். எந்த கட்சி வேண்டாம் என்று காங்கிரசை அண்ணா அனுப்பினாரோ, அந்த காங்கிரசோடு கூட்டணி சேர விமான நிலையத்துக்கும், டெல்லிக்கும் தூது செல்கிறார்கள்.

காமன்வெல்த் போட்டி நடத்தியதில் சுரேஷ் கல்மாதி மீது 1000 கோடி ரூபாய் ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தியதில் லலித்மோடி மீது 470 கோடி ஊழல் என விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால் தொலைத் தொடர்பு துறையில் 1.5 லட்சம் கோடி ஊழல் புரிந்ததாகக் கூறப்படும் ஆ. ராசாவின் மீது ஏன் விசாரணை இல்லை? இதிலிருந்தே இந்தியாவை ஊழல்வாதிகள் ஆளுகின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

மக்களுக்கு இலவச டிவி, காஸ் அடுப்பு, அரிசி கொடுத்து விட்டால் வறுமை ஒழிந்து விடாது. அவர்களின் வருமானத்திற்கு வழி செய்தால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும். அதற்காக நல்ல பல திட்டங்களை சிந்தித்து கொண்டு இருக்கிறேன். இலவசங்கள் கொடுத்ததை சாதனை என்று கூறுபவர்கள், ஓட்டுக்கு நோட்டு கொடுப்பது வேதனையாக இருக்கிறது. அவர்கள் கோடி கோடியாக சொத்து சேர்த்து இருப்பதால் நோட்டுக்களை கொடுக்கின்றனர்.

ஆட்சியாளர்கள் பிரேக் இல்லாத வாகனத்தை நிதானம் இல்லாமல் இயக்கி விட்டார்கள். இனி அந்த வண்டியை அவர்களே நிறுத்தினாலும் நிறுத்த முடியாது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி. பா.ஜ.க ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஊழல் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களில் தான் ஊழல் தலை விரித்தாடுகிறது என பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி கூறுவது உண்மை.

நான், பா.ஜ.க,வை பற்றி பேசினால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப்போகிறேன் என்பார்கள். தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறி வருகிறது. இந்த முறையும் நிச்சயம் ஆட்சி மாறும்.

விஜயகாந்த் யாரோடு கூட்டணி சேரப்போகிறார் என்று தான் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இப்போதும் சொல்கிறேன், மக்களோடும், கடவுளோடும் தான் கூட்டணி. அதற்கெல்லாம் இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது வருகிறவர்கள் வரட்டும் என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X