தேர்தல் நெருங்கும்போது அதிமுக கூட்டணிக்குக் காங்.வரும்-டாக்டர் கிருஷ்ணசாமி
நெல்லை: சட்டசபைத் தேர்தல் நெருங்கும்போது அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறியதாவது:
தென்மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மதுரையில் நடந்தது. வடமாவட்டங்களின் கூட்டம் நவம்பர் 10ல் விழுப்புரத்தில் நடக்கிறது. தேர்தலுக்கு முன் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முயற்சித்து வருகிறோம். 6வது மாநில மாநாடு விரைவில் நடக்க உள்ளது.
மேலவை அமைப்பதற்கு அரசு முயற்சித்து வருகிறது. அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு 19 சதவீத இடஒதுக்கீடு கோரி வரும் நவம்பர் 15ல் கவர்னர் மாளிகைக்கு பேரணி செல்கிறோம். பட்டதாரி ஒதுக்கீடு என்பது 60 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. தற்போது நடைமுறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 6 மாதமே எம்.எல்.ஏ.,பதவி கொண்டவர்கள் இன்னும் 6 ஆண்டுகளுக்கான மேலவை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியாது.
இதனை எதிர்த்து புதிய தமிழகம் சார்பில் வழக்கு தொடர உள்ளோம். ஜனவரியில் தென்மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கோரி போராட்டம் நடத்த உள்ளோம்.
அ.தி.மு.க.,கூட்டணியில் இன்னும் புதிய கட்சிகள் வர உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் காங்கிரஸ் கூட வரவாய்ப்புள்ளது என்றார் அவர்.