மாவோயிஸ்ட் நக்சலைட்கள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 6 போலீஸார் பலி
பாட்னா: சட்டசபைத் தேர்தல் நடந்து வரும் பீகார் மாநிலத்தில், மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 6 போலீஸார் உயிரிழந்தனர்.
ஷூகார் என்ற மாவட்டத்தில் நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. 2ம் கட்ட தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நடந்திருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில டிஜிபி நீலமணி கூறுகையில், ஷூகார் மாவட்டத்தில் ஜித்தாகி என்ற இடத்தில் ரோந்து சென்ற போலீஸ் ஜீப்பைக் குறி வைத்து இந்த கண்ணிவெடித் தாக்குதல் நடந்தது. அதில் ஷியாம்பூர் பத்தா போலீஸ் நிலைய அதிகாரி பிரவீன் குமார் சிங் உள்பட 6 போலீஸார் உயிரிழந்தனர். ஜீப் சுக்கு நூறாக சிதறிப் போய் விட்டது.
இறந்தவர்களில் நான்கு பேர் சிறப்பு போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஜீப் டிரைவராவார். ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர் என்றார்.